குழந்தை
வெள்ளி கிழமைகளில் வீடு திரும்பும் குழந்தைகள் அம்மாக்களின் இடுப்பை கட்டி கொள்ளுகிறார்கள்
கழுத்தை வளைத்து கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்
கண்களை மூட சொல்லி ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்
பிறகு ஒவ்வொன்றாக மடித்து கண்களை திறக்க சொல்கிறார்கள்
இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி இடதும் வலதுமாக அசைத்து
'டூ டேஸ் லீவ்'
என கூறும் குழந்தைகளின் குதூகலத்தை
அம்மாக்கள் மட்டுமே அறிகிறார்கள் !..
-paapu
சின்ன மீனை காட்டி
'இது நான் 'எனவும்
பெரிய மீனை காட்டி
'அக்கா' எனவும்
சொல்லிய குழந்தை
அடுத்த மீன் கிடைக்காதலால்
கடலை காட்டி
'இதுதான் நீ ' என்றாள்
அம்மாவிடம்
- naavish senthilkumar
அகன்று விரித்த
கால்களின் நடுவே வைத்து
தட்டில் இருக்கும் சோற்றை விட
தரையில் அதிகம் சிந்தியபடி
சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தையிடம்
"மாமாவுக்கு பசிக்குது கொஞ்சம் குடுங்க செல்லம் " என்று கை நீட்டினேன்
பிஞ்சு விரல்களால் ஒற்றை பருக்கையை எடுத்து
என் உள்ளங்கையில் வைத்தது .
அதை உண்டதும் என் வாழ்நாள் முழுவதுக்குமான
பசி தீர்ந்தது.
-kattalai jeya
Sunday, November 21, 2010
Subscribe to:
Comments (Atom)
